Friday, August 8, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு -9

தட்டாங்கல்


கழற்சிக்கல், கழிச்சாங்கல், தட்டாங்கல் , அம்மானை, ஐந்து கல் , கூலாங்கல் என்றெல்லாம் கூறப்படும் தட்டாங்கல் பெண்கள் ஆடும் விளையாட்டு. ஆண்களுக்கு பிரத்யோகமாய் கோலி, கிரிக்கெட் (ஆனால் பெண்களும் அதை ஆடுவதுண்டு :-) ) இருப்பது போல இது பெண்களுக்கான ஆட்டம்.

கற்களின் எண்ணிக்கை

ஐந்து கல் கொண்டும் விளையாடலாம் . ஏழு கல் கொண்டும் ஆடலாம். சில ஊர்களில் ஐநூறு கல் வைத்தும் விளையாடுவார்கள். கற்களின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை எனலாம்.

ஆரம்பிக்கும் முறை

ஆட்டத்தை யார் ஆரம்பிப்பது என்பதற்கு ஒரு வழி உண்டு. இரு குழுவாக பிரிந்து அணி தலைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் ஒருவர் கற்களை கையில் எடுத்து மேலே வீசி அனைத்து கற்களையும் புறங்கையில் இயன்ற அளவு பிடித்து பின் அந்த புறங்கையில் தாங்கிய கற்களை மறுபடியும் உயரே வீசி கையில் பிடிக்க வேண்டும். அப்படி பிடித்த எண்ணிக்கை ஒற்றையெனில் அவர்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். இரட்டையெனில் அடுத்தவர் ஆரம்பிப்பர். சிலர் இது போல் அல்லாமல் சாதரணமாய் விளையாட ஆரம்பிப்பர்.

விளையாடும் முறை

கற்களை தரையில் பரப்பி முதலில் ஒவ்வொரு கல்லாய் கையில் எடுக்க வேண்டும் . சும்மா இல்லை ஒரு கல்லை மேலே போட்டு அது கீழே வரும் முன் கையில் ஒரு கல்லை எடுத்து கொண்டு கீழே வரும் கல்லை பிடிக்க வேண்டும். இப்படியாக அடுத்த சுற்றில் இரண்டு கல்லை சேர்த்து பிடிக்க வேண்டும் அதற்கு பின் மூன்று. சுற்றுகளில் ஒற்றையாய் மிஞ்சும் இறுதி கல்லை தனியே பிடிக்கலாம் . அதன் எண்ணிக்கை எப்படி அமையும் என்றால்...


ஐந்தில்
1 - 1
2 - 2 + 2
3 - 3 + 1
4 -4

ஏழில்
1 - 1
2 - 2 + 2 + 2
3 - 3 + 3
4 - 4 + 2
5 - 5 + 1
6 - 6
இது ஐந்து மற்றும் ஏழு கல் கொண்டு ஆடும் போது. ஆறில் பிடிக்க முடியாது விட்டுவிடும் வாய்ப்பு அதிகம் . இதில் ஒருவர் விட்டு விட்டாலோ தவறான எண்ணிக்கை எடுத்தாலோ அடுத்தவர் ஆட வேண்டும்.. இப்படி எத்தனை முறை வாய்ப்பை விட்டார்கள் எத்தனை முறை முழுவதுமாய் பிடித்தார்கள் என்று பார்க்க வேண்டும்.

மேற்கூறிய எண்ணிக்கைக்கு பின் கற்களை மேலே வீசி, பின் புறங்கையில் தாங்கி அடுத்தவரிடம் எந்த கல் என்று கேட்க வேண்டும். அவர் சுட்டிய கல்லை மட்டும் கையில் வைத்து மற்ற கற்களை கையை நெகிழ்த்தி கீழே தள்ள வேண்டும். பின் கையில் தங்கிய ஒரு கல்லை மறுபடியும் மேலே வீசி கீழே கிடக்கும் மற்ற கற்களை கையில் எடுத்து மேலிருந்து கீழே வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். பின் இரண்டு.. மூன்று இப்படியே இருக்கும் எண்ணிக்கை வரை.

நூற்றுக்கணக்கில் கற்கள் வைத்து விளையாடும் பட்சத்தில் ஒருவர் விட்டுவிட்டால் அடுத்தவர் சிதறி கிடக்கும் கற்களை கலைக்காமல் பிடிக்க ஆரம்பிப்பார்கள். இதில் அவர்கள் எடுத்த கல் அவர்களே வைத்தும் கொள்வார்கள். கற்கள் தீர்ந்ததும் அனைவரும் அவரவர் சேர்த்த கல்லை எண்ணுவார்கள். எண்ணிக்கையில் கடைசியாய் இருப்பவர் தன்னிடம் இருக்கும் கல்லை அனைத்தையும் பொதுவில் வைப்பார். உதாரணமாய் பத்து கற்கள் வைக்கிறார் என்றால் அனைவரும் தங்கள் சேமிப்பு கல்லில் இருந்து பத்து கற்கள் போட அதை வைத்து ஆட்டம் மறுபடியும் தொடரும். இறுதியில் கல் இல்லார் தோற்றார். கல் மிக சேர்த்தவர் வென்றார்.

இதில் கற்களை விசிறும் போது நாம் பிடிக்க இருக்கும் எண்ணிக்கைக்கு தக்க நெருங்கினபடியோ , கலக்கமாகவோ போடலாம் . கைகளுக்கு நல்ல பயிற்சியாகும். கவனமும் அவசியம். எத்தனை உயரமாய் கல்லை வீசுகிறோமோ அது திரும்பும் அவகாசத்தில் கீழே உள்ள கல்லை எடுக்க இலகுவாக அமையும். அப்படி எடுக்கும் போது மற்ற கற்களை தொடாமல் எடுக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளும் இருக்கும். இதில் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். நான் விளையாடும் போதே பாட்டு நின்று ஆட்டம் மட்டுமே எஞ்சியது . அந்த பாட்டு பின்வருமாறு..

தட்டாங்கி கொட்டும் புள்ள

தயிரும் சோறும் திங்கும் புள்ள

அப்பம் சுட்டா திங்கும் புள்ள

அவல் இடிச்சா திங்கும் புள்ள

அங்கும் இங்கும் பார்க்கும் புள்ள

அவலை வாரித் திங்கும் புள்ள!

(நன்றி நம்பிக்கை ராமா பாடலுக்கு. )

No comments: